பத்தில் போர்த்திய ஆடைக்கு
பதினெட்டு யன்னல் வைத்து
பதினெட்டு யன்னல் வைத்து
இருபதில் உடுப்பவள்
பெண்ணியம் பேசுகிறாள்,
அங்கம் மறைத்து ஆடை அணிவது
அடக்குமுறையாம்...
கடைசிக் காதலியை கைவிட்டவன்
களவை மறைக்க
காரணம் சொன்னான்,
காதலிக்கு கள்ளத் தொடர்பாம்...
பெண்ணைக் கொடுக்க
சீதனம் கசக்குது
பெண்ணை எடுக்க
சீதனம் இனிக்குது
அடங்கிப் போவது பெண்மையாம்...
அடக்கிப் போடுவது ஆண்மையாம்...
பொன்னையும் பெண்ணையும்
துறக்கச் சொல்லி,
பொன்னில் வீடும்
பெண்ணில் படுக்கையும்
செய்வது
ஆன்மீகத்தின் ஓர் அங்கமாம்
அது ஆசையின் அடிமைத் தனம்
அல்லவாம்...
ஆயுதம் விற்பது
அரச அலுவல்
ஆளைக் கொள்வது
உரிமை மீறல்
வல்லரசுக்கு வக்கிர புத்தி
இல்லவே இல்லையாம்...
பயங்கரவாதத்தை
பகிரங்கமாய் எதிர்த்து
பகிரங்க இரகசியமாய்
பயங்கரம் செய்வது,
இராஜதந்திர காய் நகர்த்தலாம்...
அதுவே அந்நாட்டின் இறைமையாம்...
கண்டதைச் சொல்லி
சொன்னதை முடிக்கு முன்
என் கண்ணாடிக் கூட்டிலும்
கண்டேன் கற்களை,
உண்மை கசப்பது
உண்மை தானே ....!!!



