Saturday, February 12, 2011

நிலவுடன் ஒரு கனவு...!!!

அனுமதி கேட்கா வந்த அறிமுகங்கள்
விடை பெறாது தொடரும் உறவுகள்
ஒருகணப் பிரிவிலும் ஒட்டும் ஏக்கங்கள்,
என்றும் விடை தேடும்..., சில கவிதைகள்...

வேலி போட்ட ஓடையை
வேடிக்கை பார்க்கும் ஒட்டகமாய்,
இரவை மறந்து பயணிக்கும்
விளக்கில்லா வாகனப் பயணமாய்,
எனக்கில்லா உன்னோடு
என் இனிய தருணங்கள்...

தூறல் தரும் மழையும்
தூசி போடும் வெயிலும்,
பேசித் தீர்க்கும் பொழுதுகளின்
வானிலையை மட்டும் மாற்றாதிருக்க...,
இல்லாத மொழிக்கும்
சொல்லாத பாஷைக்கும்
இலக்கணங்கள் தேடியே
விடியும் பல பொழுதுகள்...

சொல்லில் செய்யும் ஏளனமும்
செயலில் கலக்கும் வன்முறையும்,
பூ வாசனை ஏந்திய முற்களாய்
மூக்கையும் முகத்தையும் குத்த...,
கொஞ்சலையும் கெஞ்சலையும்
ஒற்றையாய் ரசிக்கும்,
முள் வாசனை உணர்ந்த
தனியொரு இதயம்...


நாட்களின் சுழற்சியில்
வானிலையும் மாறலாம்.....
விடியும் பொழுதொன்றில்
விடைபெறும் பொழுதும் இணையலாம்.....
வாசனையை உதிர்ந்த முற்கள்
இதயத்தையே தைக்கலாம்.....
அந்நாள் வரை.......,
வேடிக்கை... பயணம்... தேடல்...
ஒன்றாய் தொடரும்.....