பிச்சைக்காரி பிரசவித்தால்
மழலையும் தொழில் செய்திடும்...
அழுதழுது உழைத்தால் தான்
அதன் வயிறு நிரம்பிடும்...
வறுமை கொண்ட மங்கைக்கு
உடலோன்றே ஒரு முதலா...?
சதை புசிக்கும் ஆணுக்கேல்லாம்
சாதி பேதம் ஒரு தடையா...?
தப்புகளும் தர்மமாகும்
சூழ்நிலை எனும் வேதமிருந்தால்...
அநீதியும் நீதியை ஈன்றெடுக்கும்
பேச்சில் மயக்கும் மருந்திருந்தால்...
காதலெனும் திரையணிந்தால்
கனவிலும் ஒரு கலை தெரிந்திடும்...
தோல்வி தரும் காயமெல்லாம்
மறு துணையின் தூதில் மறைந்திடும்....
எவன் கண்ணும் கன்னியில்லை...
எவள் மனதும் பத்தினியில்லை...
பாவத்தை தள்ளித் தவழ,
எவரும் இங்கு குழந்தையில்லை...
பேசாத நிஜங்கள்
பேசாமல் நிஜமாகும்...
அகராதியில் அதன் பெயர்
"யதார்த்தம்" என பதிவாகும்...!
0 comments:
Post a Comment